சென்னை: ரெயில் நிலையங்களில் வழங்கப்படும் பயணச்சீட்டுகளில் அச்சிடப்பட்ட மை விரைவாக அழிந்து விடுவதால் ஏற்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, டிக்கெட் பிரிண்டர்களின் திறனை மேம்படுத்த வேண்டும் என்று தெற்கு ரெயில்வே வலியுறுத்தியுள்ளது.
ரெயில் நிலைய கவுண்டர்களில் கணினிமயமாக்கப்பட்ட பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் சில டிக்கெட்டுகளில் அச்சிடப்பட்ட மை தரம் குறைவாக இருப்பதால், டிக்கெட் வாங்கிய சில மணி நேரங்களிலேயே முக்கிய தகவல்கள் மங்கிவிடுவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ரெயில் எண், பயண தேதி, இருக்கை எண் உள்ளிட்ட விவரங்கள் அழிந்து விடுவதால், பயணத்தின் போது டிக்கெட் பரிசோதகர்களிடம் சிக்கல் ஏற்படுகிறது. டிக்கெட்டில் உள்ள விவரங்கள் தெளிவாக தெரியாதபோது பயணிகளுக்கும் டிக்கெட் பரிசோதகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் நிலையும் உருவாகிறது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் இந்திய ரெயில்வே வாரியத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், டிக்கெட் அச்சிட பயன்படுத்தப்படும் பிரிண்டர்களின் திறனை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தரமான மைகளை பயன்படுத்துவதுடன், டிக்கெட் அச்சிடும் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
ரெயில் பயணிகளுக்கு தேவையற்ற சிரமம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், டிக்கெட் பரிசோதகர்களுடனான வாக்குவாதங்களை குறைக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
