மணலி அருகே மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் மூதாட்டி பிணம்
சென்னை: சென்னை மணலி அரியலூர் சாலை சந்திப்பில் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி இளைஞர்கள் மணலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்த்தனர்.
அப்போது, புதிதாக அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாயில், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த மூதாட்டி மணலி சி.பி.சி.எல். நகரை சேர்ந்த ஓர்மாமாள் (வயது 72) என்பது தெரியவந்தது.
இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் மூதாட்டி வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், ஆனால் நேற்று காலை மழைநீர் கால்வாயில் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மூதாட்டியின் ஆடைகள் கிழிந்ததாலும், நாக்கு கடிக்கப்பட்டதாலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தை ஆவடி இணை கமிஷனர் விஜயகுமார், செங்குன்றம் துணை கமிஷனர் மணிவண்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர். மேலும் ஆவடி தடயவியல் துறை சார்பில் நிர்மலா தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.