சென்னை: இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி வசதிகளும், விரைவில் அமைக்கப்படும் புதிய உற்பத்தி வசதிகளும் இந்திய மற்றும் அமெரிக்க சந்தைகளில் ஐபோன்களுக்கான விநியோக தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில்தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கட்டமைப்பை விரும்பவில்லை என்று நேரடியாகக் கூறினார்.
டிரம்ப்பின் உரை இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி அமைப்பு மற்றும் தொடர்புடைய திட்டங்களைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை விரிவாகப் பார்ப்போம். அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, தோஹா சென்ற டிரம்ப், அங்கு நடந்த தொழிலதிபர்கள் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, ஆப்பிள் நிறுவனம் தோஹாவில் தனது ஐபோன் தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பாக அதிகாரப்பூர்வ மட்டத்தில் முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்போது பேசிய டிரம்ப், “ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் மீது எனக்கு ஒரு சிறிய பிரச்சனை உள்ளது.

நான் உங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். நீங்கள் 500 பில்லியன் டாலர் முதலீட்டைக் கொண்டு வந்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் இந்தியாவில் ஒரு தொழிற்சாலை அமைக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் ஒரு தொழிற்சாலை அமைக்க நான் விரும்பவில்லை.” இருப்பினும், இந்த விஷயத்தில் ஆப்பிள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மொபைல் போன்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை ஆப்பிள் தயாரித்து விற்பனை செய்கிறது. சீனாவும் இந்தியாவும் நிறுவனத்தின் சாதனங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளர்கள். கடந்த சில ஆண்டுகளாக ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா மூலம் ஆப்பிள் இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரித்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இதற்கு இந்திய அரசு வழங்கிய சலுகைகள் மற்றும் சீனாவில் நிலவும் சிரமங்கள் காரணமாகும்.
இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன்களின் அசெம்பிளியை அமெரிக்காவிற்கு நகர்த்துவது ஒரு சவாலான பணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கான ஊதியம் மிக அதிகமாக உள்ளது. மேலும், அமெரிக்காவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத சிப்கள் மற்றும் கூறுகளை மட்டுமே ஆப்பிள் தயாரிக்கிறது. இது குறித்து ஆப்பிள் எந்த கருத்தும் தெரிவிக்க முன்வரவில்லை. அதே நேரத்தில், இந்தியாவில் தனது தற்போதைய திட்டங்கள் எதுவும் ஜனாதிபதி டிரம்பின் கருத்துக்களால் பாதிக்கப்படாது என்று ஆப்பிள் நிறுவனம் இந்திய அரசாங்கத்திடம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை மூலம் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள ஐபோன் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் அமைந்துள்ள உற்பத்தி ஆலைகளில் தற்போது பணிகள் நடந்து வருகின்றன. கிருஷ்ணகிரி மற்றும் தும்கூரில் விரைவில் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மட்டும், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆப்பிள் சாதன உற்பத்தி ஆலையில் இருந்து 20 மில்லியன் (2 கோடி) ஐபோன்கள் தயாரிக்கப்பட்டன. இதில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 மாடல்களும் அடங்கும். இந்தியாவில் நேரடி விற்பனை மையங்களாக ஆப்பிள் டெல்லி மற்றும் மும்பையில் ஆப்பிள் ஸ்டோர்களை அமைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகு உற்பத்தி தொடர்பான திட்டங்களின் அடுத்த கட்டம் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.