சென்னை: நலம் விசாரித்து அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட லேசான தலைசுற்றலை தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அரசு பணிகளை தொய்வில்லாமல் மேற்கொண்ட அவர் வீடு திரும்பிய பிறகு கடந்த வாரம் முதல் தலைமைச் செயலகம் சென்று அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கலும் நாட்டினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது:-
உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது. அந்த உணர்வு நீங்கி, புது வலிமையைப் பெற்றேன் இன்று, இன்றைய #KolathurVisit-இல், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், ரூ.18.26 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம், பெரம்பூர், மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.9.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கொளத்தூரில் புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம், பெரவள்ளூர் காவல் நிலையம், சட்டம் ஒழுங்குப் பிரிவு, போக்குவரத்துக் காவல் பிரிவு, சைபர் குற்றப்பிரிவுக் கட்டடம், ரெட்டேரியில் AC பேருந்து நிறுத்தம் என ரூ.17.65 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். நலம் விசாரித்து அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.