உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பெரும் சவாலாக இருக்கும் இந்த நேரத்தில், தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஒரு சிறிய ஆனால் தாக்கம் மிகுந்த முயற்சியை தொடங்கியுள்ளனர். மக்கள் தினசரி உண்ணும் பழங்களின் விதைகளை சேகரித்து தரிசு நிலங்களிலும் மலைப்பகுதிகளிலும் விதைக்கும் இவர்களின் திட்டம், இயற்கையை மீண்டும் பசுமையாக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரம்மதேவர நரேஷ், கர்ணதி நரேஷ், விக்ரம் ஆகியோர் இணைந்து தொடங்கிய லிட்டில் சோல்ஜர் பவுண்டேஷன் வாட்ஸ்அப்பின் மூலம் “பக்ரிதி யாத்ரா” இயக்கத்தை நடத்துகின்றனர். வீடுகளில் பழவிதைகளை தூக்கி எறிவதற்கு பதிலாக சேகரித்து கொடுக்க மக்களை ஊக்குவிக்கின்றனர். கடந்த சில மாதங்களில் நல்கொண்டா மாவட்டம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான விதைகளை விதைத்து பசுமை பரப்பை அதிகரிக்கின்றனர்.
“இயற்கை நமக்கு அளித்துள்ள வளங்களுக்கு பதிலளிக்கும் நேரம் இது” என்று விக்ரம் கூறியுள்ளார். இவர்களின் முயற்சியில் சேகரிக்கப்பட்ட விதைகள், மரங்களாக வளரும் வகையில் சரியான இடங்களில் தூவப்படுகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் கூட இயற்கையின் காவலர்களாக மாறக்கூடிய சூழலை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
பசுமை சவால் எனப்படும் இவர்களின் பிரச்சாரம், உள்ளூர் மக்களிடையே பரவலான கவனத்தை பெற்றுள்ளது. உயர் தொழில்நுட்பங்களை நாடாமல், சாதாரண மக்களின் பங்களிப்பை வைத்து இயற்கையை மீட்கலாம் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்த இளைஞர்களின் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.