டெல்லி: இடதுசாரி மாணவர் குழுக்கள் நடத்திய பேரணியில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைகலைக்கழகத்தில் (ஜெஎன்யு) ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இடதுசாரி மாணவர் குழுக்கள் நேற்று வசந்த் குஞ்ச் காவல் நிலையம் நோக்கிப் பேரணி சென்றனர்.
இந்தப் பேரணியைத் தடுக்க முயன்றபோது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆறு காவலர்கள் காயமடைந்ததாகவும், 28 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஜெஎன்யு மாணவர் சங்கத் தலைவர் நிதீஷ் குமார், துணைத் தலைவர் மனிஷா, பொதுச் செயலாளர் பாத்திமா ஆகியோரும் அடங்குவர்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின்போது இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் ஏபிவிபி உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களை தாக்கியதாகக் இடதுசாரி குழுக்கள் குற்றம் சாட்டி இந்த போராட்டத்தை நடத்தியது.