புதுவை: புதுவை சட்டமன்றத் தேர்தலையொட்டி தவெக உடன் நேயம் மக்கள் கழகம் என்னும் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
தமிழ்நாட்டை போலவே புதுவை சட்டமன்றத் தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் தனித்து களம் காணும் தவெக புதுவையில் நேயம் மக்கள் கழகம் என்னும் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, “நேயம் மக்கள் கழகம்” நிறுவனத் தலைவர் நேரு (எ) குப்புசாமி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் “உருளையன்பேட்டை” மற்றும் “தட்டாஞ்சாவடி” ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில் கடந்த 16-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. மேலும் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.