சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் திரைத்துறையில் தனது 20 ஆண்டு காலப் பயணத்தை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தனது அறிமுகத் திரைப்படமான ‘சென்னை 600028’ படத்தின் மீது நம்பிக்கை வைத்ததற்காக மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.பி. சரண் ஆகியோருக்கு முதற்கண் நன்றி தெரிவித்துள்ளார்.
தனது 20 ஆண்டு பயணம் அழகான அனுபவமாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ள வெங்கட் பிரபு, ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமானதாகவும், ஒவ்வொரு கதையும் புதிய சவால்களை கொண்டதாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார். சில திரைப்படங்கள் உடனடியாக கொண்டாடப்பட்டதாகவும், சில படங்கள் காலப்போக்கில் ரசிகர்களின் அன்பைப் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
திரைப்படங்கள் அனைத்தும் தனக்கு ஏதோ ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்ததாகவும், சினிமா மீதான தனது ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் விரும்பியதை தொடர்ந்து செய்வதற்கு ரசிகர்களின் ஆதரவே முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது ஏற்ற இறக்கங்கள் அனைத்திலும் ரசிகர்கள் துணை நின்றதாகவும், ஒவ்வொரு புதிய முயற்சியையும் அதே அன்புடன் வரவேற்றதாகவும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அளித்த அன்பு தன்னை தொடர்ந்து முன்னோக்கி செல்லும் தன்னம்பிக்கையை வழங்கியதாகவும் வெங்கட் பிரபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தனது வழக்கமான பாணியில் புதிய முயற்சிகளுடன் சினிமா பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபுவின் இந்த பதிவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
