சென்னை: இன்றைய தலைமுறையினரின் காதல், திருமணம் மற்றும் வாழ்க்கை குறித்த பார்வையே மாறிவிட்டதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும், திருமண வாழ்க்கையில் காதலை உயிர்ப்புடன் வைத்திருப்பது எப்படி என்ற கேள்விக்கு, “திருமணமே பண்ணாதீங்க” என்று அவர் நகைச்சுவையாக பதிலளித்தது விழாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இளன், தற்போது ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இயக்குநர் இளன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சான்வி மேக்னா நடித்துள்ளார்.
ராதிகா சரத்குமார், செந்தில், யோகிபாபு, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற படவிழாவில் படக்குழுவினர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ராதிகா, இன்றைய இளைஞர்கள் சுதந்திரமாக முடிவெடுக்கின்றனர் என்றும், காதல், திருமணம் மற்றும் வாழ்க்கை குறித்த அவர்களது புரிதல் முந்தைய தலைமுறையினரிடமிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதாகவும் கூறினார்.
“இப்போதுள்ள தலைமுறையினர் தங்களுக்கான முடிவுகளை தாங்களே எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ‘போகப்போக தெரியும்’ என்ற பழைய பாடல் வரிகளையே அறிவுரையாக வழங்குகிறேன்” என்று அவர் கூறினார்.
மேலும், திருமண வாழ்க்கையில் காதலை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க சிறந்த வழி என்ன என்று கேட்கப்பட்டபோது, “திருமணமே பண்ணாதீங்க” என ராதிகா கூறியதால் விழாவில் சிரிப்பலை எழுந்தது.
இதற்கிடையே கதாநாயகி சான்வி மேக்னா ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தபோது நடிகர் செந்தில் குறுக்கிட்டு, “இது தமிழ்ப் படம்மா… தமிழில் பேசுங்க” என்று கூறியதும் நிகழ்ச்சி மேலும் கலகலப்பானது.
