கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரான்பூர் பகுதியில் உள்ள புண்ணிய தேவரியா அரசு பள்ளியில் மாணவர்கள் வழக்கம்போல் மதிய உணவு சாப்பிட்டனர். அப்போது பூசணிக்காய் கூட்டு சாப்பிட்ட 27 மாணவர்களுக்கு சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட 14 மாணவர்கள் சிகிச்சைக்காக புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடத்த மருத்துவக் குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்றுள்ளனர்.
மருத்துவக் குழுவின் ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னரே மாணவர்களின் உடல்நலக்குறைவுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
