திருப்பூர்: தாராபுரம் தனித் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் சுகன்யா அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த சத்யபாமா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு
தாராபுரம் தொகுதியில் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. திமுக சார்பில் தாராபுரம் தனித் தொகுதி வேட்பாளராக தொழில்முறை வழக்கறிஞரான சுகன்யா அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுக குடும்பப் பின்னணியைக் கொண்ட சுகன்யாவுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“வெற்றிக்கனியை தலைமைக்குச் சேர்ப்பேன்”
செய்தியாளர்களை சந்தித்த சுகன்யா, திமுக தலைவர் ஸ்டாலின் தனக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்ற பிறகு மக்களைச் சந்தித்து விரிவாகப் பேசுவேன் என்றும் கூறியுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்று வெற்றிக்கனியை கட்சித் தலைமைக்குச் சேர்ப்பேன் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
தற்போது சட்டமன்றம் செயல்படும் விதத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், “ஒரு வார்த்தை படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்” என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
