புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு நேர்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை சிவராஜ் சிங் சவுகான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ”பணி நிமித்தமாக இன்று போபாலில் இருந்து டெல்லிக்கு வந்து பூசாவில் விவசாய திருவிழாவை துவக்கி வைத்து, குருஷேத்திரத்தில் ஆர்கானிக் விவசாய இயக்க கூட்டம் நடத்தி, அதன்பின் சண்டிகரில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்த வேண்டியிருந்தது. இதற்காக ஏர் இந்தியா விமானம் எண் AI436-ல் டிக்கெட் பதிவு செய்தேன். எனக்கு இருக்கை எண் 8C ஒதுக்கப்பட்டது. சீட்டில் போய் அமர்ந்தேன். இருக்கை உடைந்து உள்ளே சென்று விட்டது.
அந்த இருக்கையில் அமர்வது வேதனையாக இருந்தது. எனக்கு ஏன் மோசமான இருக்கை ஒதுக்கப்பட்டது என்று விமானப் பணிப்பெண்களிடம் கேட்டபோது? இந்த இருக்கை சரியில்லாததால் அதை விற்க வேண்டாம் என நிர்வாகத்திடம் முன்பே தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் இருக்கைக்கான டிக்கெட் தவறுதலாக விற்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இது ஒரு இருக்கை மட்டுமல்ல, பல இருக்கைகள் அப்படித்தான். என் சக பயணிகள் என்னை ஒரு நல்ல இருக்கையில் உட்காரச் சொன்னார்கள்.
ஆனால் என் பொருட்டு இன்னொரு நண்பரை நான் ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? அதனால், அதே இருக்கையில் அமர்ந்து பயணத்தை முடிக்க முடிவு செய்தேன். டாடா நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் சேவை மேம்பட்டிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது தவறு என்று இப்போது புரிகிறது. உட்காருவதில் உள்ள அசௌகரியம் எனக்கு கவலையில்லை, ஆனால் முழுத் தொகையையும் வசூலித்த பிறகு, பயணிகளை மோசமான மற்றும் வசதியற்ற இருக்கைகளில் உட்கார வைப்பது தவறல்லவா? இது பயணிகளை ஏமாற்றும் செயல் இல்லையா?
ஏர் இந்தியா நிர்வாகம் எதிர்காலத்தில் இதுபோன்ற அசௌகரியத்தை எதிர்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமா அல்லது பயணிகளின் நெரிசலை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வார்களா?” என்று அவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ஏர் இந்தியா, “ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய இந்த விஷயத்தை நாங்கள் கவனமாக ஆராய்ந்து வருகிறோம் என்று உறுதியளிக்கிறோம். உங்களுடன் பேச வாய்ப்பளித்ததற்கு நன்றி.”