கராச்சி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலால் கடும் கோபத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் உஷார் நிலையில் இருக்க முப்படையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கராச்சி கடற்கரை பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. தரையில் இருந்து ஏவக்கூடிய திறன் கொண்ட ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்த திடீர் செயலை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த ஏவுகணை சோதனையை நடத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதால் போருக்கு தயாராகிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தால் எப்படி பதிலடி கொடுப்பது என்று பாகிஸ்தான் ஆலோசித்து வருவதாக கூறப்படும் வேளையில் பாகிஸ்தான் இந்த சோதனையை நடத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் இணையதள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.