மேற்குவங்கம்: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து 13 ஆண்டுகளாக வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்கள் உஜிர் அலி (43), அவரது மனைவி ஜைனூர் (36) மற்றும் அவர்களது மூன்று மகன்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் வங்கதேசத்தின் சாப்பாய்நவாப்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
உஜிர் அலி சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா-வங்கதேச எல்லையை சட்டவிரோதமாகக் கடந்து இந்தியாவிற்குள் நுழைந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் மேற்கு வங்க மாநிலத்தின் சாகர்திகி பகுதியில் குடியேறி, தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார்.
மேலும், போலி ஆவணங்களை பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட இந்திய அரசு ஆவணங்களையும் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.