சென்னை: அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் 6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ராஜினாமா கடிதங்களை ஏற்கும் முன்பு எம்.எல்.ஏ.க்கள் சுயவிருப்பத்துடன் பதவி விலகினார்களா என்பதை பேரவைத் தலைவர் விசாரிக்கவில்லை என்பதால், அந்த நடவடிக்கை சட்டரீதியாக ஏற்கத்தக்கதல்ல என அதிமுக கொறடா தரப்பில் வாதிடப்பட்டது.
மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தக் கோரி அதிமுக சார்பில் பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே அவர்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டன. இதை எதிர்த்து அதிமுக கொறடா எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
விசாரணையில் மூத்த வழக்கறிஞர் வி.கிரி, கட்சித் தாவல் நடவடிக்கை நிலுவையில் இருந்தபோதே ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும், எம்.எல்.ஏ.க்களின் சுயவிருப்பம் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் வாதிட்டார். பேரவைத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்கப்படவில்லை என்றும், பேரவைச் செயலர் தாக்கல் செய்த பதில் மனுவை பேரவைத் தலைவர் சார்பிலான பதில் மனுவாக ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ராஜினாமா செய்த 30 நிமிடங்களிலேயே அவர்கள் தவெகவில் இணைந்தது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும் அதிமுக தரப்பு வாதிட்டது. விசாரணை நிறைவடையாததால் வழக்கு ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
