கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறியதாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மருத்துவம் படிக்காமல் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்காணிக்க மருத்துவக்குழு அமைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து கூறுபவர்கள், சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்பவர்கள் மற்றும் போலி டாக்டர்களை கண்டறியும் வகையில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நர்சு கிருத்திகாவை வைத்து மருத்துவக்குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போச்சம்பள்ளியைச் சேர்ந்த எஸ்தர் (32) என்பவர் சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறி வருவது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
ஸ்கேன் எந்திரத்துடன் வந்தவர் சிக்கினார்
இதையடுத்து எஸ்தர் ராயக்கோட்டைக்கு ஸ்கேன் எந்திரத்துடன் வருவதை அறிந்த மருத்துவக்குழுவினர், அங்கு மறைந்திருந்து கண்காணித்தனர். அவர் வந்ததும் சினிமா பாணியில் சுற்றிவளைத்து பிடித்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், எஸ்தர் மருத்துவம் படிக்காத நிலையில் கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறியதாக தெரியவந்தது. மேலும், அவருக்கு உதவியாக திருப்பத்தூரைச் சேர்ந்த குருமூர்த்தி (32) என்பவரும் உடன் வந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவக்குழுவினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் எஸ்தர் மற்றும் குருமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் ஸ்கேன் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கருவின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறிந்து தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
