சென்னை: வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகளின் முறைகேடுகளைத் தடுக்க, வாடிக்கையாளர்கள் இ-கே.ஒய்.சி. உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கால அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் 25 லட்சத்துக்கும் அதிகமான வீட்டு உபயோக கியாஸ் இணைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு இ-கே.ஒய்.சி. நடைமுறையை கட்டாயப்படுத்தியது. ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருப்பது, இறந்தவர்களின் பெயரில் உள்ள இணைப்புகளை மற்றவர்கள் பயன்படுத்துவது, மானிய சிலிண்டர்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு போர் காரணமாக சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு, நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறையும் சிலிண்டர் முன்பதிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.
இ-கே.ஒய்.சி. ஆவணங்களை முதலில் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், பின்னர் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 85 சதவீத வாடிக்கையாளர்கள் ஏற்கனவே ஆவணங்களைப் பதிவேற்றியுள்ளதாகவும், மீதமுள்ள 15 சதவீதம் பேர் விரைவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியாஸ் விநியோகஸ்தர்களின் செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே இ-கே.ஒய்.சி. விவரங்களைப் பதிவு செய்யலாம். விநியோக ஊழியர்களின் மொபைல் செயலி மூலமாகவும் ஆவணங்களைப் பதிவேற்றும் வசதி உள்ளது. கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கியாஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
