பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் ஆதரவாளர்கள் முதல்வர் பதவியை கோரி போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதன் காரணமாக, டி.கே. சிவகுமாருக்கும், சித்தராமையாவுக்கும் இடையே பனிப்போர் தொடர்கிறது. இந்த நிலையில், இருவரும் கடந்த 7-ம் தேதி டெல்லி சென்றனர்.
அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை தனித்தனியாக சந்திக்க அனுமதி கோரினர். ஆனால், ராகுல் காந்தி அவரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதன் காரணமாக, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை சந்தித்த பிறகு பெங்களூரு திரும்பினார்.

இந்த சூழ்நிலையில், நேற்று நாடு திரும்பிய சித்தராமையாவும், டி.கே. சிவகுமாரும் டெல்லி சென்றனர். இருவரும் ராகுல் காந்தியை சந்திக்க நேரம் கேட்டனர், ஆனால் அவர் நேரம் ஒதுக்கவில்லை. இதன் காரணமாக, இருவரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலாவை சந்தித்துப் பேசினர்.
ராகுல் காந்தி சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமாரை சந்திக்க மறுத்தது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கேட்டபோது, மூத்த காங்கிரஸ் தலைவர்கள், “சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோர் முதல்வர் பதவிக்காகப் போராடுவது காங்கிரஸ் அரசுக்கு மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ராகுல் காந்தி அதிருப்தி அடைந்துள்ளார். எனவே, இருவரையும் சந்திக்க நேரம் ஒதுக்க அவர் மறுத்துவிட்டார்” என்று தெரிவித்தனர்.