சென்னை: பயிர் உற்பத்தி திறனில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் திருவிழா நடைபெறுகிறது. வேளாண் வணிகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட முதலமைச்சர், உழவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வேளாண் வணிகத் திருவிழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் குறித்த நாளில் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. உழவர்களின் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் திட்டங்களை அறிவிக்கிறோம்.
தமிழகத்தில் நெல் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 5.66 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட 1 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆக்கப்பூர்வமாக செயல்படுவதால் தான் கடந்த 4 ஆண்டுகளில் 456 மெட்ரிக் டன் லட்சம் உணவு உற்பத்தியை எட்டி உள்ளோம். 47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வந்துள்ளோம். விவசாயிகளை தேடி சென்று அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முகாம்கள் நடத்துகிறோம்.
பயிர் உற்பத்தி திறனில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தமிழகம் இந்தியாவில் 2-ம் இடத்தில் உள்ளது. வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமங்களும் வளர்ச்சி அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.