சென்னை: கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக ஒரு முகூர்த்த காலம் இருக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த முகூர்த்த காலம் ஏற்படும். இந்த உலகில் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழப் பணம் இன்றியமையாத ஒன்று. வருமானம் குறைகிறபோது தேவைக்குக் கடன் வாங்குவது இயல்பு. ஆனால், அந்தக் கடன் வெறும் பொருளாதாரச் சுமையாக மட்டும் இல்லாமல் மனதில் நிம்மதியில்லாத சூழலையும் ஏற்படுத்திவிடும். கடன் பட்டுவிட்டால் அதை அடைக்கும் வரை யாருக்கும் நிம்மதியிருக்காது.
ஒரு சிலர் கடன் வாங்கிக் கடன் அடைப்பது என்னும் பழக்கத்திலும் இருப்பர். இவ்வாறு செய்வதன் மூலம் கடன் தவிர்க்க முடியாத சுழலில் சிக்கியதுபோல நம்மை ஆழ்த்தி விடுகிறது. கடன்பட்டு அதை அடைக்க முடியாமல் வருந்துகிறவர்களுக்கு ஓர் எளிய பரிகாரம் உண்டு. அதுவே மைத்ர முகூர்த்தம். மைத்ர முகூர்த்தம் என்றால் என்ன? அசுவினி நட்சத்திர நாளில் மேஷ லக்ன நேரமும் அனுஷ நட்சத்திர நாளின் விருச்சிக லக்ன நேரமும் `மைத்ர முகூர்த்தம்’ எனப்படுகின்றன.
அசுவினி நட்சத்திரம் என்பது கேதுவுடைய நட்சத்திரம். இதில் மேஷ லக்னம் என்பது செவ்வாயின் ஆதிக்கம் கொண்டது. கேது பகவான் ஒரு பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியவர். கடனை அடைக்க, உழைப்பும் முயற்சியும் தேவை. அதற்குச் செவ்வாயின் அனுக்கிரகம் தேவை. எனவேதான் கேதுவுக்கு உரிய நாளில் செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ லக்ன காலத்தில் கடனை அடைப்பதன் மூலம் கேது கடன் பிரச்னைகளைக் குறைத்து அருள்புரிவார்.
அதே போன்று விருச்சிக லக்னமும் செவ்வாயின் ஆதிக்கம் மிகுந்த காலம். அனுஷ நட்சத்திரம் சனிபகவானுக்குரியது. சனிபகவான் உழைப்பையும் ஊதியத்தையும் கொடுக்கக்கூடியவர். எனவே, அனுஷ நட்சத்திர நாளில் வரும் செவ்வாயின் பலம் பெற்ற விருச்சிக லக்ன நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த கடன் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
குறிப்பாக உழைப்பும் நம் முயற்சியும் இணைந்து நமக்கு நவக்கிரகங்களின் அருளைப் பெற்றுத்தரும் என்பதுதான் இதன் தாத்பர்யம். “பொதுவாக அசுவினி நட்சத்திரம் உதிக்கும் நாளில் வரும் மேஷ லக்னம் மற்றும் அனுஷ நட்சத்திர நாளில் வரக்கூடிய விருச்சிக லக்னம் வரும் நேரங்களில் ஒரு முகூர்த்தம் ஏற்படும். அதுவே மைத்ர முகூர்த்தம் எனப்படுகிறது. மைத்ர முகூர்த்தம் என்பது ஒருவருக்குப் பணத்தால் ஏற்படக் கூடிய மன சஞ்சலங்களுக்கு விடிவுகாலம் தரும் முகூர்த்த காலம்.
யார் எல்லாம் கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக இந்த முகூர்த்த காலம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த முகூர்த்த காலம் ஏற்படும்.