தஞ்சாவூர்: சிங்கப்பூர் மூதாட்டியை ஏமாற்றி போலி ஆவணங்கள் தயாரித்து 800 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரித்ததோடு புகார் அளித்தவர்களை மிரட்டிய வழக்கில் கேபிள் செந்திலை காவல்துறையினர் கைது செய்ய சென்ற நிலையில், வீட்டிலிருந்து வெளியில் வர மறுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக நாடகம் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை சிராஜ்பூர் நகரில் பங்களா போன்ற வீட்டில் வசித்து வருபவர் செந்தில் என்கிற கேபிள் செந்தில். இவர் 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்ட முகமதா பேகம் என்பவரது 800 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை போலி ஆவணம் தயாரித்து நிலங்களை தனி தனி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ததாக தஞ்சை மாவட்ட டிசிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கேபிள் செந்தில் அவரது மனைவி உட்பட 12 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கேபிள் செந்தில் முன் ஜாமின் பெற்றிருந்தார் .
இந்த நிலையில் கேபிள் செந்தில் மீது புகார்தாரரை மிரட்டுவது உள்ளிட்ட மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், அந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் கேபிள் செந்தில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து அவரை கைது செய்ய காவல்துறையினர் நேற்று அவரது வீட்டிற்கு சென்றனர்.
இதனை அறிந்த கேபிள் செந்தில் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு திறக்க மறுத்து அடம்பிடித்தார். இதனால் சாதாரண உடையில் சென்ற போலீசார் வீட்டிற்கு வெளியே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. போலீசிடம் இருந்து தப்பிக்க தான் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக கூறி குரல் பதிவு ஒன்றை பத்திரிக்கையாளர்களின் வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பினார் கேபிள் செந்தில்.
போலீசார் பல முறை அழைத்தும் வீட்டிலிருந்து வெளியே வர மறுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிய கேபிள் செந்தில் செய்தியாளர்களை கண்டதும், ஜன்னல் வழியாக செய்தியாளர்களுக்கு 10 நிமிடங்களுக்கு மேலாக தன்னிலை விளக்கம் அளித்தார். தான் சாப்பிட சென்றால் கூட பின்னால் போலீசார் வந்து நிற்பதாக தெரிவித்த அவர், நான் பலரது வீடுகளுக்கும் உங்கள் சேனலை கொண்டு செல்கிறேன் அதற்காக எனக்கு உறுதுணையாக இருங்கள் என்றார் கேபிள் செந்தில்.
தஞ்சை மாவட்ட குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் ரவிமதி கூறும் போது, 800 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்ஜாமீன் பெற்றுள்ள கேபிள் செந்தில் மீது மிரட்டல் வழக்கு உள்ளிட்ட மேலும் சில வழக்குகள் உள்ள நிலையில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் போலீசுக்கு எதிராக இப்படி ஒரு நாடகத்தை அவர் அரங்கேற்றி இருப்பதாக தெரிவித்தார்.