திருச்சி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்க வட மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் போராட்டம் நடைபெற்றது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல்வேறு தரப்பினர், தமிழக அரசு பேருந்துகளில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் திருச்சி தில்லை நகர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனியார் நிறுவனத்துடன் செய்யப்பட்டதாக கூறப்படும் ஒப்பந்த நகலை பகிரங்கமாக கிழித்து எறிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்படும் தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
