சென்னை: புதுச்சேரியில் தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் மரிய வில்சனின் சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அவரையும் அவரது மனைவி கெரோலினையும் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணையில் உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் பெற ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தபோதும், அமைச்சர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும், வழக்கை ரத்து செய்யவும் கோரி அமைச்சர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற நிதி அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசரா?” என கேள்வி எழுப்பியதுடன், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து ஆகஸ்டு 31-ம் தேதிக்குப் பிறகு அமைச்சர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என உறுதியளிக்கப்பட்டது. பின்னர் வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் ஆஜராகவில்லை. பொறுப்பு நீதிபதி சந்திரசேகர் வழக்கை விசாரித்தார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என அமைச்சர் சகோதரர் தரப்பு வழக்கறிஞர் பிரவீன் வலியுறுத்தினார். இதையடுத்து வழக்கு செப்டம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
