சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, கடந்த ஆட்சியில் சினிமா மற்றும் டாஸ்மாக் துறைகள் மூலம் ‘ஒயிட் மணி’ ஊழல் உருவாக்கப்பட்டதாக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஊழல் தொடர்பான விவாதத்தில், “ஒன்று சுரங்கம், மணல் எடுப்பது தொடர்பான ‘பிளாக் மணி’ ஊழல். மற்றொன்று ‘ஒயிட் மணி’ என்று சொல்லி உருவாக்கப்பட்ட ஊழல். சினிமா துறை. இன்னொன்று லிக்கர் டிபார்ட்மெண்ட்… டாஸ்மாக்” என்று குறிப்பிட்டார்.
இதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “நான் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. எந்த நிறுவனத்தின் பெயரையும் சொல்லவில்லை. சினிமா என்று மட்டுமே கூறினேன்” என விளக்கம் அளித்தார். எனினும், திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து துணை சபாநாயகர் ரவிசங்கர், அமைச்சர் பேசி முடித்த பின்னர் உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை ஜனநாயக முறையில் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தினார். ஆனால் உறுப்பினர்களின் எதிர்ப்பு தொடர்ந்ததால், அவை விதிகளை பின்பற்ற வேண்டும் என அவர் எச்சரித்தார்.
சட்டப்பேரவையில் நடந்த இந்த காரசாரமான விவாதம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. அமைச்சர் கூறிய ‘ஒயிட் மணி ஊழல்’ குறித்த கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விவாதம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
