சென்னை: பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங்கைத் தடுப்பதற்கான விதிகளை 2009-ல் வெளியிட்டது. ராகிங்கைத் தடுக்கவும், இவற்றைப் பின்பற்றி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டது.
இந்நிலையில், ராகிங் தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாதது குறித்து விளக்கம் கேட்டு தமிழகத்தில் உள்ள சென்னை சவீதா, வேலூர் சிஎம்சி ஆகிய 2 கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 18 மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- இவர்களது மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்லூரியில் சேரும் ஒவ்வொரு மாணவரும் மற்றும் அவரது பெற்றோரும் சேர்க்கையின் போதும், ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் ராகிங் எதிர்ப்பு உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவன வளாகத்தில் ராகிங் தொடர்பான சம்பவங்களை தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக இந்த உறுதிமொழி கருதப்படுகிறது. ஆனால், மாணவர்களிடம் ராகிங் எதிர்ப்பு உறுதிமொழியை அவர்களது கல்வி நிறுவனம் பெறவில்லை. இது விதிகளை மீறுவது மட்டுமின்றி மாணவர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும். இதற்காக உங்கள் நிறுவனம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது.
இது தொடர்பாக உரிய காரணங்களை தெரிவிக்க வேண்டும். இந்நிலையை சரி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல், ராகிங் தடுப்பு விதிகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு சில கல்லூரிகள் விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.