பல்கலைக்கழகங்களுக்கு ‘கியூட்’ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் ‘அப்டேட்’ ஆகாததால், மாணவர்கள் பாடங்களை தேர்வு செய்ய முடியாமல், குழப்பத்தில் தடுமாறி வருகின்றனர். இந்தியாவில் உள்ள 46 மத்திய பல்கலைகழகமும், மாநில பல்கலைகழகமும், நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைகழகமும் இணைந்து, மொத்தம் 250க்கும் மேற்பட்ட பல்கலைகழகங்களில் உயர்கல்வி படிக்க நுழைவுத்தேர்வு ‘காமன் யுனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட்’ (கியூட்) என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மூலம், இளநிலையிலான கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர முடியும். இந்தியா முழுவதும், ஆண்டுதோறும், மூன்று லட்சம் இடங்களுக்கு 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

‘கியூட்’ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, https:/cuet.nta.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 1 அன்று விண்ணப்பம் தொடங்கியது. மார்ச் 22ல் ‘ஆன்லைன்’ பதிவு முடிவடைகிறது. விண்ணப்பிக்க இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இணையதளத்தில் பல்கலைகள் குறித்த விபரம் ‘அப்டேட்’ ஆகாததால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, ராசிபுரம் பகுதியை சேர்ந்த கல்வியாளர் சுரேஷ் கூறியதாவது: ‘கியூட்’ தேர்வில் மொழிப்பாடம், பொதுத்தேர்வு மற்றும் மாணவர் சேர விரும்பும் துறையில், மூன்று பாடங்கள் என மொத்தம் ஐந்து தேர்வுகள் மட்டுமே எழுத முடியும். பாடங்களை, மாணவர்கள் பிளஸ் 2ல் படித்தவை மட்டுமே தேர்வு எழுத தேவையில்லை. மாணவர்கள் சேர விரும்பும் பல்கலைகளில் எந்த பாடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை தகுதியாக குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் கூறியவாறு, மத்திய பல்கலைகளில் மட்டும் அனைத்து துறை மற்றும் அதில் சேர தேர்வு எழுத வேண்டிய பாடங்களை அறிவித்துள்ளனர். ஆனால், மற்ற பல்கலைகழகங்களில் கல்லூரிகள் குறித்த விபரம் முழுவதுமாக ‘அப்டேட்’ ஆகவில்லை. இதனால், விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் எந்த பாடத்தை தேர்வு செய்வது என முடிவு செய்ய முடியாமல் குழப்பத்தில் தடுமாறி வருகின்றனர். இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளதால், ‘கியூட்’ நுழைவுத்தேர்வு இணையதளத்தை விரைவில் ‘அப்டேட்’ செய்ய வேண்டும். இல்லையென்றால், மாணவர்கள் சரியான பாடத்தை தேர்வு செய்யாமல் ஏமாற்றமடைந்து விடுவர்.