பெங்களூரின் பல்லாரி சாலை மற்றும் ஜெயமஹால் சாலையை அகலப்படுத்தும் பணிக்காக அரண்மனைக்கு சொந்தமான 15.39 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் சில நிலம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அரச குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு 3,014 கோடி ரூபாய் டி.டி.ஆர். வழங்க வேண்டியுள்ளது.
இந்த அளவிலான பணத்தை கொடுத்தால், அரசுக்கு பொருளாதார சுமை ஏற்படும். பணம் கொடுப்பதில் இருந்து தப்பிக்க, நிலத்தை பயன்படுத்தவும், மாநில அரசு, பெங்களூரு அரண்மனை நிலம் பயன்பாடு மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இது சட்டசபை மற்றும் மேல்சபையில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இதற்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே இந்த சட்டத்தை கர்நாடக அரசிதழில் நேற்று வெளியிட்டதன் மூலம், அதிகாரப்பூர்வமாக சட்டத்தை அரசு அமல்படுத்தியது.
அரசின் செயலுக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. அரச குடும்பத்தினருக்கு எதிராக, அரசு பழிவாங்கும் அரசியல் செய்கிறதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.