கேரளா: கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ.173 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘பிரேமலு’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்தை இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கி வந்தார். ஆனால், கதையில் முழுமையான திருப்தி ஏற்படாததால் அந்த படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கிரிஷ் ஏ.டி. இயக்கிய புதிய திரைப்படமாக ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ உருவானது.
நிவின் பாலி – மமிதா பைஜு
இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும், மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் ‘பாவனா ஸ்டுடியோஸ்’ சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
9 நாட்களில் ரூ.173 கோடி
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், படம் உலகளவில் 9 நாட்களில் ரூ.173 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருவதால், விரைவில் ரூ.200 கோடி வசூல் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் வெளியாகிறது
மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் செப்டம்பர் 4-ஆம் தேதி தமிழில் வெளியாக உள்ளது. இதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
