சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் 10-வது திரைப்படமாக ‘டோரதி’ உருவாகியுள்ளது. 1990-களில் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் நிலவிய சாதியச் சூழல், வன்முறை, நச்சு ஆண்மை போன்ற சமூகப் பின்னணிகளுக்கு மத்தியில் வளரும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.
இரு நண்பர்களின் வாழ்க்கையில் ‘டோரதி’ என்ற பெண் கதாபாத்திரம் ஏற்படுத்தும் மாற்றங்களையும், அவர்களின் உறவுகளில் உருவாகும் திருப்பங்களையும் டிரெய்லர் விறுவிறுப்பாக காட்சிப்படுத்துகிறது.
இப்படத்தில் சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.
தம்மம் ஃபிலிம்ஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் இப்படம் உருவாகியுள்ளது. ‘டோரதி’ திரைப்படம் ஏற்கனவே டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சென்டர்பீஸ் பிரிவில் திரையிடப்பட்டு கவனம் பெற்றுள்ளது. இதன் மூலம் இப்படம் சர்வதேச திரைப்பட விழா வட்டாரத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ‘டோரதி’ மூலம் அவர் இசையமைத்த திரைப்படங்களின் எண்ணிக்கை 1,540 ஆகிறது. ஏற்கனவே ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
