தெலுங்கானா: நடனத்தில் சாதித்த நாக துர்கா நடிப்பிலும் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் பிறந்தவர் நாக துர்கா. நாட்டுப்புற பாடல் மற்றும் ஆடலில் ஆர்வம் கொண்ட நாக துர்கா 14 வயதிலிருந்தே நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார். 1600க்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல விருதுகளை வென்றுள்ளார்.
கொரோனா காலத்தில் தெலுங்கு மக்களை மகிழ்வித்தது நாகதுர்காவின் நாட்டுப்புற நடனங்கள். நடனமாடி அதை யூடியூப்பில் வெளியிட்டு பிரபலமானார். சில நடன வீடியோக்கள் 150 மில்லியன் பார்வையாளர்களைகூட தாண்டியது. கடந்த ஆண்டு ‘கலிவி’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.
இந்த படம் வெளிவரும் முன்பே தமிழில் ‘லவ் ஓ லவ்’ படத்தில் ஒப்பந்தமாகி விட்டார். இந்த படத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் அறிமுகமான பவிஷ் நாராயண் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் ஆகியோரும் நடித்துள்ளனர். மகேஷ் ராஜேந்திரன் இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்துள்ளது. கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். நடனத்தில் சாதித்த நாக துர்கா நடிப்பிலும் சாதிப்பாரா என்பது படம் வெளியானதும் தெரிய வரும்.