புதுடெல்லி: கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் பங்கினை உடனடியாக விடுவிக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை ஆகஸ்ட் 13-ந்தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுகளின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் ஆகஸ்ட் 3-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை ஆகஸ்ட் 13-ந்தேதி விசாரிப்பதாக தெரிவித்தது.
காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஒதுக்கிய அளவிலும், கர்நாடகா உண்மையில் தமிழகத்துக்கு திறந்துவிட்ட நீரின் அளவிலும் பெரும் பற்றாக்குறை இருப்பதாக தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 139-வது கூட்டத்தில், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 வரை பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கனஅடி நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ஜூலை 30-ந்தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்திலும் இந்த உத்தரவு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு வெளியிட்ட தகவலின்படி, ஆகஸ்ட் 3-ந்தேதி நிலவரப்படி கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி மற்றும் ஹேமாவதி அணைகளில் மொத்தம் 77.537 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்துக்கு விகிதாச்சார அடிப்படையில் கிடைக்க வேண்டிய நீரின் அளவு 26.954 டி.எம்.சி. என தமிழக அரசு கணக்கிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த 4.536 டி.எம்.சி. அளவு மிகக் குறைவு என்றும் தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 13-ந்தேதி நடைபெற உள்ளது.
