மும்பை: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தனது பெயரில் உள்ள சிம் கார்டு பயன்படுத்தப்பட்டதாக கூறி, மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் மோசடி கும்பல் ரூ.3.83 கோடி பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை ஜூஹுவைச் சேர்ந்த 64 வயது ஓய்வுபெற்ற வங்கி மேலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள், தங்களை பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள் என அறிமுகப்படுத்தினர். அவரது பெயரில் உள்ள சிம் கார்டு பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறி அவரை அச்சுறுத்தினர்.
மேலும், கைது வாரண்ட் உள்ளிட்ட போலி ஆவணங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி, அவரது வங்கி கணக்குகள், சேமிப்புகள் மற்றும் முதலீடுகள் குறித்த விவரங்களை பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, லக்னோவைச் சேர்ந்த ஐ.ஜி. விக்ரம் சிங் பேசுவதாக கூறிய மற்றொரு நபர், ஜம்மு-காஷ்மீரில் அவரது பெயரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதில் ரூ.7 கோடி பயங்கரவாத நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மிரட்டியுள்ளார். ரிசர்வ் வங்கி பெயரில் போலி கடிதம் ஒன்றையும் அனுப்பி, பணத்தைச் சரிபார்ப்பதற்காக குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு அனுப்புமாறு கூறியுள்ளனர்.
இதனை நம்பிய முதியவர் ஆகஸ்ட் 7 முதல் 17-ம் தேதி வரை நான்கு தவணைகளில் ரூ.3.83 கோடியை மோசடி கும்பல் தெரிவித்த கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். மேலும், அவர் ‘டிஜிட்டல் கைது’ செய்யப்பட்டிருப்பதாக கூறி வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் தொடர்ந்து கண்காணித்துள்ளனர். பின்னர் மீண்டும் பணம் கேட்டதால் சந்தேகமடைந்த அவர், வங்கி அதிகாரியை அணுகியுள்ளார்.
தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் உதவி மையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
