நேபாளம்: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிய 24 வயது கூலித்தொழிலாளி ஒருவர், மாமரத்தின் கிளையை இறுகப் பற்றிக்கொண்டு பல மணி நேரம் போராடி உயிர் தப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் திபெத் எல்லைப் பகுதியான ரசுவா மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவைத் தொடர்ந்து பெருவெள்ளம் ஏற்பட்டது. ஆற்றில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் சிக்கினர்.
பிதுர் பகுதியில் கழிப்பறை குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த பிபேக் குமால் என்ற தொழிலாளி, பலத்த இரைச்சல் கேட்டதும் சக தொழிலாளர்கள் எச்சரித்ததால் வெளியேற முயன்றார். ஆனால் அதற்குள் சீறிப்பாய்ந்த சேறும் சகதியுமான வெள்ளம் அவரை அடித்துச் சென்றது.
அப்போது வழியில் இருந்த மாமரம் ஒன்றில் சிக்கிக்கொண்ட பிபேக், அதன் கிளையை இறுகப் பற்றியபடி பல மணி நேரம் உயிருக்கு போராடினார். பின்னர் மீட்புக்குழுவினர் அவரை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
“அந்த மாமரம் மட்டும் இல்லையென்றால் நான் உயிருடன் இருந்திருக்க முடியாது” என பிபேக் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
