தெலங்கானா: ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பரோலில் வெளியே வந்து சுமார் 40 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்தவர், அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹபூபாபாத் மாவட்டம் தண்டலபல்லி மண்டலம் பெத்தமுப்பாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தெல வீரன்னா. இவருக்கு கடந்த 1983-ம் ஆண்டு வாரங்கல் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதித்தது.
அதே ஆண்டு டிசம்பர் மாதம் பரோலில் வெளியே வந்த வீரன்னா, அதன்பிறகு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுமார் நான்கு தசாப்தங்களாக காவல்துறையின் கண்காணிப்பில் சிக்காமல் மஹபூபாபாத் மாவட்டத்திலேயே வாழ்ந்து வந்துள்ளார்.
மேலும், அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய அவர் சிறந்த ஆசிரியர் விருதும் பெற்றதுடன், பணியில் இருந்து ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது.
சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த மே 16-ம் தேதி வாரங்கல் மத்திய சிறை சிறப்பு அதிரடிப்படை போலீசார் வீரன்னாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து பரோல் மற்றும் தண்டனைக் குறைப்பு சலுகைகளை வழங்க மறுத்த சிறைத்துறையின் உத்தரவை எதிர்த்து, அவரது மனைவி சாரம்மா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி டி.மாதவி தேவி அடங்கிய அமர்வு, வீரன்னா சட்டத்தின் பிடியில் இருந்து திட்டமிட்டு தப்பி வாழ்ந்ததாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், பரோலில் செல்லும் கைதிகளை கண்காணிக்க உரிய டிராக்கிங் அமைப்பு மற்றும் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க சிறைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
