தியோரியா: உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மதன்பூர் காவல் நிலைய பொறுப்பாளராக வினோத் குமார் சிங் பணியாற்றி வந்தார். காவல் துறையில் அவர் பணிபுரியும் பாணி உள்ளூர் மக்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு பின், வினோத்குமாருக்கு பணியிட மாறுதல் உத்தரவு கிடைத்தது. இதைத்தொடர்ந்து, கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவருக்கு மாலை அணிவித்து, மேள தாளங்கள் முழங்க குதிரை ஊர்வலத்துடன் இடமாற்றம் செய்யப்பட்ட வினோத்குமாருக்கு அப்பகுதி மக்கள் பிரியாவிடை அளித்தனர்.

பலர் அவரது பிரிவைத் தாங்க முடியாமல் சோகத்தில் ஆழ்ந்தனர். காவல்துறை அதிகாரி வினோத் குமார் தனது பதவிக் காலத்தில் உள்ளூர் மக்களின் பாதுகாப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்க பல தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கூட தன் எல்லைக்கு உட்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கூட்டி அணிவகுப்பு நடத்தினார். இது குற்றவாளிகள் மனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பலராலும் பாராட்டப்பட்டது.
இதேபோல், போலீஸ் அதிகாரி வினோத் குமாரும் பல ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு பல்வேறு வகையில் உதவி செய்துள்ளார். சமீபத்தில், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மகளுக்கு தேவையான உதவிகளை செய்து திருமணத்தை ஏற்பாடு செய்ததற்காக அப்பகுதி மக்கள் அவரை நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.