சென்னை: சிறு விவசாயிகளுக்கும் தனித்தனி அளவுகளில் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்றுள்ள இதர பெரு விவசாயிகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு முக்கிய நிவாரண அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள குறு விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக விரிவான ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவுத்துறை அமைச்சர் வி. காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் என். மரிய வில்சன் உள்ளிட்ட அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 28.11.2025 அன்று வெளியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும் அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல்களும் பரிசீலிக்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை, நிதி ஆதாரங்கள் மற்றும் விவசாயிகளின் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு, 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு தள்ளுபடி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
ரூ. 50,000 வரை பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி: அதன்படி, ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள குறு விவசாயிகளுக்கு முழு கடன் தொகையும், அதாவது 100 சதவீத கடனும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், குறு விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி விவரம் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது: ரூ.50,001 முதல் ரூ.60,000 வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.40,000 தள்ளுபடி ரூ.60,001 முதல் ரூ.70,000 வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.30,000 தள்ளுபடி ரூ.70,001 முதல் ரூ.80,000 வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.20,000 தள்ளுபடி ரூ.80,001 முதல் ரூ.90,000 வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.10,000 தள்ளுபடி ரூ.90,001 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.10,000 தள்ளுபடி ரூ.1 லட்சத்திற்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படும்.
அதேபோல், சிறு விவசாயிகளுக்கும் தனித்தனி அளவுகளில் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்றுள்ள இதர பெரு விவசாயிகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.