சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் மாறுபட்ட வானிலை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மத்திய ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தென் தமிழகம் வரை சுமார் 800 கிலோமீட்டர் நீளத்துக்கு உருவான இடிமின்னல் மேகத்திரள்கள் காரணமாக உள் மாவட்டங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது.
சென்னை வெதர்மேன் அஜித் குமார் வெளியிட்டுள்ள வானிலை தகவலின்படி, நேற்றைய தினம் உருவான இந்தப் பிரம்மாண்டமான இடிமின்னல் மேகத்திரள்கள் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வழக்கமாக வறண்ட வானிலை காணப்படும் திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பதிவானது. நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகாவின் பெங்களூரு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்த மேகங்கள்
இலங்கைக்கு கிழக்கே நிலவிய வளிமண்டலச் சுழற்சி காரணமாக மழை மேகங்கள் வழக்கமான நகர்விலிருந்து மாறுபட்டு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்ததாக அஜித் குமார் தெரிவித்துள்ளார். இதனால் கடலோரப் பகுதிகளில் உருவான மழை மேகங்கள் உள் மாவட்டங்களை நோக்கி நகர்ந்து மழையை கொடுத்துள்ளன.
இதேபோன்ற வானிலை அமைப்பு தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பு உள்ளதால், உள் மாவட்டங்களில் மழை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தென்மேற்குப் பருவமழை படிப்படியாக விலகுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், இம்மாத இறுதியில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வார இறுதியில் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 செ.மீ. மழை
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செப்டம்பர் 16-ம் தேதி அறிக்கையின்படி, மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மதனூர், உளிபெந்தா, ஆண்டியப்பனூர் பகுதிகளில் 8 செ.மீ.; சலினாயனப்பள்ளி, கோபனப்பள்ளி, ஓசூர், ஆலங்காயம், நல்லூர், கோட்டமிட்டா, ஒடுகத்தூர், மேலலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 7 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது.
தென்கனிக்கோட்டை, ராசிபுரம், கிருஷ்ணகிரி, குடியாத்தம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் 6 செ.மீ. வரையும், மதுரை பேரமையூர், நெடுங்கல், கரூர், புதுச்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் 5 செ.மீ. வரையும் மழை பதிவாகியுள்ளது.
வரும் செப்டம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 17-ம் தேதி இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், சேலம், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில், திருச்சி விமான நிலையத்தில் 37.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
