கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தொடர் ட்ரோன் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், பச்சிளம் குழந்தை உட்பட 37 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே நீடித்து வரும் போரில், குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்
நேற்று ஒரே நாளில் உக்ரைன் மீது ரஷ்யா 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பல்வேறு பகுதிகளில் உயிரிழப்புகளும், கட்டிடங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு சேதங்களும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், பச்சிளம் குழந்தை உள்பட 37 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், ரயில் போக்குவரத்து, தொழிற்சாலைகள், கிடங்குகள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொருளாதாரத்தை குறிவைப்பதாக ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
ரஷ்யா போர்க்களத்தில் மட்டுமின்றி உக்ரைனின் பொருளாதார கட்டமைப்புகளையும் குறிவைத்து வருவதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் அத்தியாவசிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், இதன் மூலம் மக்களின் மன உறுதியை சிதைக்க ரஷ்யா முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து, உக்ரைனுக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
