சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய மாநிலத் தலைவராக பொறுப்பேற்கக்கூடியவர்கள், சில மாதங்களில் தங்கள் ஆதரவாளர்கள் உட்பட புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.
ஆனால், செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, இதுவரை புதிய நிர்வாகிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. செல்வப்பெருந்தகை புதிய மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பட்டியலைத் தயாரித்து டெல்லி தலைமையிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால் கட்சித் தலைமை இன்னும் அதை அங்கீகரிக்கவில்லை. ஏற்கனவே, மொத்தமுள்ள 77 மாவட்டத் தலைவர்களில், 10 மாவட்டத் தலைவர் பதவிகள் காலியாக உள்ளன.

அந்த காலியிடம் இன்னும் நிரப்பப்படவில்லை. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால், தற்போதுள்ள நிர்வாகிகள் அனைவரும் கோஷ்டி அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும், கட்சித் தலைமைக்கு போதுமான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த டெல்லி தலைமை புதிய திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. திறமையானவர்களை மாவட்டத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அதிகாரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
குஜராத், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தத் திட்டம் காங்கிரஸ் கட்சிக்கு பெருமளவில் உதவுகிறது. குஜராத்தில் நடைபெற்ற இந்த திட்ட முகாமில் 10 நாட்கள் அங்கு தங்கியிருந்த ராகுல் காந்தி, மாவட்டத் தலைவர்கள் தேர்வை நேரடியாகக் கவனித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவர்களுக்கான கட்சியான காங்கிரஸை உடைத்து, அதை தன்னார்வலர்களுக்கான கட்சியாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். கட்சியில் தீவிரமாகப் பணியாற்றக்கூடியவர்களை நேரடியாகத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதே இலக்காக இருக்கும். இந்தத் திட்டத்தை விரைவில் தமிழக காங்கிரசில் செயல்படுத்த டெல்லி காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
இதற்கான ஆரம்பப் பணிகளைத் தொடங்கவும் முடிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தேர்தலுக்கு குறுகிய கால இடைவெளி மட்டுமே உள்ளது. அதற்குள் மாவட்டத் தலைவர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், கட்சியை வலுப்படுத்தவும், அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக, தமிழக காங்கிரசில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் டெல்லி சென்றார். இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்தார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலவரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து இருவருக்கும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழக காங்கிரசில் பல்வேறு கடுமையான மாற்றங்கள் ஏற்படும் என்றும், புதிய மாவட்டத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் தமிழக காங்கிரசில் எதிர்பார்ப்புகள் உள்ளன.