சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் காலி பாட்டில்களை திருப்பி வழங்கும் திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வருவதாக உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் தெரிவித்துள்ளது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளின் விசாரணை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் அறிக்கை தாக்கல் செய்தது.
அதில், ‘ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற சுற்றுலா தலங்கள் உட்பட 9 மாவட்டங்களில் மதுபானக் கடைகளில் காலி பாட்டில்களை திருப்பி அனுப்பும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 7 மாவட்டங்களில் பகுதி வாரியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்க தனி டெண்டர் விடப்பட்டு, 97 சதவீத மதுபாட்டில்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், ஏப்ரல் முதல் தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்காக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தை பாராட்டிய நீதிபதிகள், “மதுபான பாட்டில்களுக்காக வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பித் தராமல், தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளான நீர்வள மேம்பாட்டுக்கும், வன மேம்பாட்டுக்கும் பயன்படுத்த அரசு வழக்கறிஞர்கள் பரிந்துரைக்கலாம்.
மேலும், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும்போது மூடியை மாற்ற வேண்டுமா அல்லது மூடியையும் திருப்பித் தர முடியுமா என்பது குறித்து தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.