சென்னையில் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தினர். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, குழு காப்பீடு, மகப்பேறு விடுப்பு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச் சங்கம் (ஷிப்ட் 1 மற்றும் ஷிப்ட் 2) சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் பி.செந்தில்குமார், மாநிலத் துணைத் தலைவர் எஸ்.வசந்தகுமார், துணைப் பொதுச் செயலர் எச்.புவனேஸ்வரி, பொருளாளர் எஸ்.பவானி உள்பட 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுக நயினார் ஆகியோர் பேசினர்.
கவுரவ விரிவுரையாளர்கள் நலச் சங்க மாநில பொதுச் செயலாளர் அருணகிரி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 7,374 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். எங்களின் முக்கிய கோரிக்கையான நிரந்தர வேலை வாய்ப்பை வலியுறுத்தி பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம்.
எங்களை பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த உத்தரவை அமல்படுத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி கவுரவ விரிவுரையாளர்களை தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.