கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நேற்று சித்திரை மாத பிரதோஷ விழா நடந்தது.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர் எலுமிச்சை சாறு திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வெள்ளி கவச அலங்காரம் சாத்தப்பட்ட பின்னர் ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார்.
அது தொடர்ந்து சாமிக்கு தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு,பஞ்ச கற்பூர ஆராத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.