பீகார்: பீகாரில் பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தமிழில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ராகுலின் கண்களில் ஒருபோதும் அச்சம் இருந்தது இல்லை. இந்தியா கூட்டணிக்கான அடித்தளம் பாட்னாவில் தான் இடப்பட்டது.
பா.ஜ.க.வின் அதிகாரத்தை மக்கள் ஒருநாள் பறிப்பார்கள். தேர்தலுக்கு முன்னதாகவே பீகாரில் உங்களின் வெற்றி உறுதியாகி உள்ளதால் பேரணியை தடுக்க பார்க்கின்றனர். ராகுல் காந்தி இந்தியாவின் வழக்கறிஞராக இருக்கிறார். மக்கள் சக்தியே உயர்ந்தது என காட்டியிருக்கிறார் தேஜஸ்வி யாதவ்.
ராகுல், தேஜஸ்வியை வெல்ல முடியாததால் கொல்லைப்புறமாக நுழைய பார்க்கிறது பா.ஜ.க. மக்களவை தேர்தலில் 400 இடங்கள் என கனவு கண்டவர்களை 240-ல் அடக்கியது இந்தியா கூட்டணி. பீகாரில் பெறும் வெற்றி தான் இந்தியா கூட்டணி அடுத்தடுத்து பெறப்போகும் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.
மக்களின் வாக்குகளை பறிப்பவர்களை மக்கள் பறிப்பர் என்பதற்கு அடையாளம் தான் இங்கு கூடிய கூட்டம். மெஜாரிட்டி மெஜாரிட்டி என கூறிக் கொண்டிருந்தவர்களை மைனாரிட்டியாக மாற்றிக்காட்டியது இந்தியா கூட்டணி. பீகார் சட்டசபையில் வெற்றி பெற்றதற்கான விழாவில் விரைவில் நான் பங்கேற்பேன். பீகாரில் பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.