வேலூர்: மத்திய அரசின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 2025-2026 கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 8-ம் வகுப்பு வரை மும்மொழி கட்டாயம் என்று கூறியுள்ளது. இதுகுறித்து, நாட்டில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘பாடத் தேர்வுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள், மதிப்பீட்டு முறைகள் என தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளின்படி புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் 2025-2026 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.
கூடுதலாக, புதிய பாடத்திட்டத்தில் இந்தி மற்றும் ஆங்கிலம் உட்பட நாட்டில் 38 மொழிகள் அடங்கும், மேலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு வரை மூன்று மொழிகள் கற்பிக்கப்படும். அவர்கள் மூன்று மொழிகளைக் கற்றிருக்க வேண்டும். மூன்றாம் மொழியை தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள், 8-ம் வகுப்பில் அந்த மொழியை தேர்ச்சி பெறவில்லை என்றால், 9-ம் வகுப்பிலும் அதே மொழியை தொடர்ந்து படித்து தேர்ச்சி பெற வேண்டும். 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது.

9 மற்றும் 10-ம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கட்டாயமாக இருக்கும். மாணவர்கள் விரும்பினால் இரு மொழிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூரில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளிடம் கேட்டபோது, ”8-ம் வகுப்பு வரை மூன்று மொழிகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்றாலும், தமிழகத்தில் உள்ள பல சிபிஎஸ்இ பள்ளிகள் கடந்த கல்வியாண்டு வரை அந்த நடைமுறையை பின்பற்றவில்லை. ஆங்கிலம், ஹிந்தி மட்டுமே கற்பித்து வந்தனர். தற்போது மும்மொழி கட்டாயம் ஆக்கப்பட்டதால், சிபிஎஸ்இ மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.