புதுடில்லி: சிக்கிம் மாநிலமும் அதன் மக்களும் தொடர்ந்து செழிக்கட்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
சிக்கிம் மாநிலம் மே 16, 1975 அன்று இந்தியாவின் 22-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று அம்மாநில மக்கள் சிக்கிம் மாநில நாள் ஆகக் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையில் சிக்கிம் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அதில், “மாநில தினத்தை முன்னிட்டு சிக்கிம் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தனது அற்புதமான இயற்கை அழகு, செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உள்ள வலுவான ஈடுபாடு ஆகியவற்றால், சிக்கிம் தேசத்திற்கான நிலையான வளர்ச்சியின் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
சிக்கிம் மக்கள் தங்களின் அன்பான பண்பு, எளிமை மற்றும் நல்லிணக்க உணர்விற்காக அறியப்படுகிறார்கள். மாநிலமும் அதன் மக்களும் தொடர்ந்து செழிக்கட்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.