தஞ்சாவூர்: கொள்கை, லட்சியம், கோட்பாடு என எதுவுமே இல்லாமல் அரசியலை பொழுதுபோக்காக நினைத்து ஒரு கூட்டம் (த.வெ.க.) சுற்றுகிறது என்றார் துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின்.
தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவர் பேசியது:
ஒரு புறம் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, மறுபுறம் மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகின்றன. இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது இளைஞர்களும், மகளிரும் எங்கள் பக்கம் என பதில் சொல்லும் விதமாக உள்ளது.
திமுக இளைஞரணியில் 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து, 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளோம். இந்தியாவிலேயே எந்தவொரு அரசியல் கட்சிகளின் சார்பு அணிக்கு இப்படியொரு வலுவான கட்டமைப்பு நிச்சயம் கிடையாது. திமுக இளைஞரணிக்கு மட்டுமே அந்தச் சிறப்பு. பல கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பதற்கே போராடிக் கொண்டிருக்கின்றனர்; ஆள் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். ஆனால், நம் இளைஞரணிக்கு பாகம் வரை நிர்வாகிகளை நியமித்துள்ளோம். இளைஞரணியால்தான் திமுக 76 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடைபோடுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் தமிழ்நாட்டுக்கு மோடியும், அமித்ஷாவும் அடிக்கடி வருவர். அவர்களெல்லாம் வருவார்களே தவிர, தமிழ்நாட்டுக்கு தேவையான நிதி மட்டும் நிச்சயம் வராது. மோடி, அமித்ஷாவின் முயற்சிகள் உத்தர பிரதேசம், பிகார் போன்ற வட மாநிலங்களில் நடக்கலாம்; ஆனால், தமிழ்நாட்டில் ஒருபோதும் நடக்காது.

பாஜக – அதிமுக கூட்டணியிலுள்ள ஒரு தலைவர், எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைப்பதற்கு தூக்கில் தொங்கிவிடலாம் எனக் கூறினார். எடப்பாடி பழனிசாமிக்கு கவுன்சிலராவதற்குக் கூட தகுதி கிடையாது; அவர் ஒரு டயர் நக்கி என மற்றொருவர் சொன்னார். இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு டபுள் என்ஜின் சர்க்கார் வேண்டும் என மோடி கூறுகிறார். அவர் முதலில் அந்த வண்டியின் டயர்களை பார்க்க வேண்டும். அவருடைய கூட்டணியில் சேர்ந்த அனைவரும் பஞ்சரான டயர்கள் என்பதால், அவரது டப்பா என்ஜின் தமிழ்நாட்டில் எப்போதும் ஓடாது.
மற்றொரு பக்கம் யாருக்கும், எந்தப் பயனும் இல்லாமல் ஒரு கோஷ்டி சுற்றுகிறது. ஒரே சத்தமாகத்தான் இருக்கிறது. கொள்கை, லட்சியம், கோட்பாடு என்பதெல்லாம் என்ன என்று தெரியாமல் ஒரு கூட்டம் சுற்றி வருகிறது. அரசியலை ஏதோ பொழுதுபோக்கு என நினைக்கின்றனர். அரசியல் என்றால் மக்கள் பணி என அவர்களுக்கு நம்முடைய இளைஞரணி கூற வேண்டும். அரசியல் என்பது ஈடுபாடு, அர்ப்பணிப்பு என்பதை திமுக இளைஞரணி நிரூபித்துக் காட்ட வேண்டும். இந்த ஈடுபாடும், அர்ப்பணிப்பும் இல்லாத கூட்டத்தை வைத்து யாராலும் எதையும் சாதிக்க முடியாது.
எனவே, இப்படிப்பட்ட பாசிசவாதிகளையும், பழைய, புதிய அடிமைகளையும் வீழ்த்த வேண்டிய பொறுப்பு இளைஞரணி தோழர்களுக்கு இருக்கிறது. தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நிகழ்கிற போர்தான் வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். இந்தப் போரில் தமிழ்நாட்டைக் காக்கப் போகிற முன் களப் படையினர், கள வீரர்களே இளைஞரணியினர். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் 200}க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற நாம் உழைக்க வேண்டும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ். ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன், மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை க. அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, என். அசோக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.