சென்னை: நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட உள்ள இருசக்கர வாகனப் பிரச்சாரப் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் கடந்த ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை தமிழகம் தழுவிய இருசக்கர வாகனப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக டிஜிபியிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், பேரணி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முந்தைய விசாரணையின்போது, போராட்டம் நடத்துவது குடிமக்களின் அடிப்படை உரிமை என நீதிபதி வி.லட்சுமிநாராயணன் குறிப்பிட்டிருந்தார். மேலும், அமைதியான முறையில் சாலையில் போராட்டம் நடத்த முடியாவிட்டால் மக்கள் வேறு எவ்வாறு போராட்டம் நடத்த முடியும் என காவல்துறைக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய களச் சூழலை கருத்தில் கொண்டே தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புதிய தேதியுடன் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து ஆகஸ்ட் 22 முதல் 25 வரை அனைத்து மோட்டார் வாகன விதிகளையும் முறையாக பின்பற்றி, வேகக்கட்டுப்பாட்டுடன் பேரணி நடத்தப்படும் என மனுதாரர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
