ஷில்லாங்: மேகாலயாவில் காசி மாணவர் சங்கம் (KSU) சார்பில் நடைபெற்ற கருப்புக்கொடி இருசக்கர வாகனப் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மூன்று மூத்த தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேகாலயா அரசுக்கு காசி மாணவர் சங்கம் விதித்திருந்த 15 நாள் காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஷில்லாங் நகரில் கருப்புக்கொடி ஏந்தியபடி இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்பட்டது. ஜெயா பகுதியில் உள்ள KSU அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கி பல்வேறு பகுதிகள் வழியாக சென்றது.
கிழக்கு ஜெயிண்டியா மலைப்பகுதியில் முன்மொழியப்பட்டுள்ள தனியார் சிமெண்ட் ஆலை திட்டத்துக்கான பொது விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெற்றது.
மேலும், மேகாலயா குடியிருப்போர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துதல், புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான விதிகளைத் திருத்துதல், அரசு பணிகளில் நேர்காணல் முறையை நீக்குதல், மேகாலயாவில் வசிப்பவர்களுக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் KSU முன்வைத்தது.
பேரணியின்போது சில வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து KSU தலைவர் ரேமண்ட் கர்ஜனா, ரூபன் நஜியார், பிங்க்மென்லாங் சான்மியட் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கை குறித்து KSU தரப்பில், எதிர்மறை சக்திகளால் வன்முறை ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
