ஃபென்சல் புயலால் தமிழகம் வரலாறு காணாத அளவுக்கு சேதம் அடைந்துள்ளது. 10 நாட்களாகியும் மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை. இதற்கிடையில், ரூ. 945 கோடி மாநில பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்பட்டது. இது மத்திய அரசின் நிதி அல்ல. ஃபென்சல் புயல் பாதிப்பை போக்க தமிழக அரசு எவ்வளவு நிதி கேட்டாலும், அதை உடனடியாக ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
தொடர் மழையால் தமிழகத்தில் 15 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. சேத மதிப்பு குறித்து விரிவான அறிக்கை தயாரித்து, முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி குழு, அந்த அறிக்கையுடன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து, தமிழகத்திற்கு உரிய நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்த வேண்டும். பயிர் சேதத்திற்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை.

ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க வேண்டும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் கட்டாயப் பாடம் இல்லை. தமிழ் கட்டாயப் பாடச் சட்டம் இயற்றப்பட்டு 19 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி, தமிழைக் கட்டாயமாக்க வேண்டும்.
ஒரு மாநிலத்தின் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அடுத்த 2 ஆண்டுகளில் கவிழ்ந்தால், 6 மாதங்களில் மீண்டும் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படும். ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் அமலுக்கு வந்த பிறகு புதிய அரசின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. இதை பாமக ஏற்க முடியாது. அனைத்து கட்சிகளும் அம்பேத்கரை பாராட்ட வேண்டும். அவரை கொச்சைப்படுத்துவதையோ, இழிவுபடுத்துவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது. அம்பேத்கரை யார் விமர்சித்தாலும் அதை ஏற்க முடியாது என ராமதாஸ் கூறியுள்ளார்.