தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை காவல்துறை அமல்படுத்தவில்லை என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவர் கொண்ட விளையாட்டு மைதானங்களில் பேரணி நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் பேரணியை வேலிகள் அமைக்கப்பட்ட மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திறந்த வெளியில் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும்.
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஒழுக்கத்தை கடைபிடித்து, மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் அமைதியான முறையில் பேரணியை நடத்த வேண்டும். மேலும், இந்த ஊர்வலத்திற்கு மூன்று தேதிகளை தேர்வு செய்து காவல் துறைக்கு விண்ணப்பிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும், தேதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் போது, பிரச்னைக்குரிய இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என தமிழக அரசு வாதிட்டது.
ஆர்எஸ்எஸ் தரப்பில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை. அதற்காக பேரணியை நிறுத்துவது நியாயமில்லை. தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்கக் கூடாது என்று வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.